search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன நிலங்கள்"

    வைகை அணையில் இருந்து 58 கிராம புதிய கால்வாயில் பாசன நிலங்களுக்கு தண்ணீரினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். #VaigaiDam
    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தண்ணீரினை திறந்து வைத்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தென்மேற்கு பருவ மழையையொட்டி முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் வட்டத்துக்கு உட்பட்ட பண்ணைப்புரம், கோம்பை, க.புதுப்பட்டி, அனுமந்தன் பட்டி, சிந்தலைச்சேரி, தேவாரம், கிருஷ்ணம்பட்டி, வெம்பக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள் மூலம் 2,045.35 ஏக்கர் நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்துக்குட்பட்ட டொம்புசேரி, மீனாட்சிபுரம், கோடாங்கி பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் மூலம் 2,568.90 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 44 கண்மாய்கள் மூலம் 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு 27.2.2016 அன்று காணொளி காட்சி மூலம் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 18-ம் கால்வாயினை சுத்தகங்கை ஓடையில் இருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டப்பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவு பெற்றதையடுத்து சோதனை அடிப்படையில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்கள் மூலம் உத்தமபாளையம் வட்டத்துக்குட்பட்ட சின்னமனூர், சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 830 ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்துக்கு உட்பட்ட சீலையம்பட்டி, பூமலைக் குண்டு தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம், பால கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 4,316 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மொத்தம் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்பொருட்டு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


    வைகை அணையின் வலதுபுற கரையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய் பகுதிகளுக்கு செல்லும் 58 புதிய கால்வாய் பணி முடிவுற்றதையடுத்து சோதனை ஓட்டத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழையால் 69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இதனை சிறப்பு நிகழ்வாக கருதி சோதனை அடிப்படையில் 58 புதிய கால்வாய் பகுதியில் தண்ணீர் திறக்கபடுகிறது. இதன் மூலம் உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 228.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்த நீர்மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், முன்னாள் எம்.பி. சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vaigaidam
    ×